Hartley College A.G.M.

ஹாட்லிக்கல்லூரியின் பழையமாணவர்களின் Executive Annual Meeting வருடாந்த பொதுக்கூட்டம் கொழும்பு வெள்ளவத்தையில் நடைபெற்றது.


அந்த நிகழ்வில் நானும் கலந்துகொண்டிருந்தேன்.

கிட்டதட்ட பெரும்பாலும் 90ம் ஆண்டிற்கு முன் ஹாட்டிலியில் கல்வி கற்றோரே அதில் கலந்துகொண்டிருந்தனர்.


அவரவர் செய்யும் தொழிலில் பாண்டித்தியம் பெற்றவர்கள்.

பல்வேறு தொழில் துறைகளில் உள்ளவர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள்.

சிலருக்கு பொறுப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தது அதனை அவர்கள் தங்களால் முடிந்த அளவு சிறப்பாக செய்தார்கள்.

ஆனால் அவர்கள் அத்தனைபேரும் மனதளவில் ஹாட்லியின் மைந்தர்களாக பாடசாலை காலங்களில் எவ்வாறு கல்லூரி கதிரைகளில் அமர்ந்து இருந்த அந்த மனநிலையில் இருந்தார்கள்.


‘வாடாஇ போடா’ கதைகள் அடுத்தவர்களின் காதுவரை நீண்டது.

பெரும்பாலும் நான் என் நண்பர்கள் இல்லாத அத்துடன் என் சம்பந்தம் இல்லாத இந்த மாதிரியான கூட்டங்களை இயன்றளவு தவிர்த்துக்கொள்வேன்.

ஆனாலும் எனது நண்பன் ஐயாகரின் அன்பான இரும்புப்பிடியில் வீட்டில் இருந்து பலவந்தமாக தூக்கப்பட்டு கூட்டத்தில் உள்ள கதிரையில் பிடிவாதமாக உட்கார வைக்கப்பட்டேன்.

ஓடவும் ஒளியவும் முடியாத நிலை.

எல்லாத்தையும் அவதானித்துக்கொண்டு இருந்தேன்.

சற்று வயது முதிர்ந்த ஹாட்லியின் மைந்தர்கள் அவர்களின் நட்பு கதைகளிலும் தன் சக நண்பர்களை அணுகும் முறையிலும் நக்கல்நெய்யாண்டி விசயத்தில் எங்களை மிஞ்சினவர்களாக இருந்தார்கள்.


அப்படியே அந்தகால பள்ளிகூட பருவ வாசமும் எங்கள் ஊருக்கே உரிய நெடியும் மாறாமல் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

ஹாட்லியின் மைந்தர்களும் எனது பாடசாலை நண்பர்களும் கூடி இருந்ததால் மனதுக்கு ஒரு ரம்மியமாக தருணமாக அது அமைந்து இருந்தது. அந்த வேளை மூளையை முற்றுமுழுதாக கழட்டி வைத்துவிட்டு கதைக்ககூடியதாகவும் மனதில் பட்டதை அலங்காரம் இல்லாமல் அளவளாக கூடியதாக சூழல் இருந்தது.

அங்கு அதிபர்களான தெய்வேந்திரராசா சேரும் கலைச்செல்வன் சேரும் அத்துடன் Art Teacher சற்குணராசா சேரும் கலந்துகொண்டு இருந்தார்கள்.
அதில் எனக்கு நெருக்கமானவர்கள் சற்குணராசா சேரும் கலைச்செல்வன் சேரும்.

அன்று பாடசாலை நாட்களில் எவ்வாறு அவர்கள் எங்களுடன் உரிமையுடன் கதைத்துக்கொண்டார்களோ அதே உரிமையுடனும் பாசத்துடனும் கதைத்தார்கள்.


எங்களை உரிமையுடன் கூப்பிட்டு ‘ Ice Cream ‘ ‘எடுத்துக்கொண்டு வா’ ‘ Fruit salad ‘ ‘போட்டுக்கொண்டு வா’ கேட்டுக்கொண்டார்கள்.

ஆசிரியர்களுக்கு அவர்கள் கேட்டவுடன் சாப்பாடு பரிமாறும் போது
நாங்களும் எங்கள் அம்மாவுக்கு மற்றும் அப்பாவுக்கு எவ்வாறு எடுத்துக்கொண்டு வந்து கொடுப்பமோ அதே உணர்வுடன் கொண்டுவந்து கொடுத்தோம்.


அதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி வார்த்தையால் சொல்லமுடியாத ஒரு திருப்தி

அந்த மனநிலைதான் இதனை என்னை எழுத தூண்டியது


அவர்களுடன் நாங்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம்.

பாடசாலை நாட்களில் நாங்கள் நீல நிற காற்சட்டையும் வெள்ளை சேட்டுடன் ‘துறுதுறு’ வேன ஓடிய அதே நினைவும் அதே மன உணர்வும் இருந்தது.


அந்த காலங்களுக்கு வலுக்கட்டாயமாக நினைவுகளால் இழுக்கப்பட்டோம்.

அப்போது நாங்கள் ‘சேர்’ மார் எங்களின் வகுப்பறைக்கு வரும்போது தங்கள் ஓய்வு அறையில் மறந்துவிட்டு வந்த அவர்களின் கைபை ‘ Chalk ‘ மற்றும் ‘ Duster ‘ க்காக அவர்கள் எடுத்துவர சொன்னதும் தலை தெறிக்க ஓடி இருந்தோம்.


பாடசாலை நாட்களில் எங்களின் ‘ Heros’ எங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களாகவே இருந்தார்கள்.


அன்று கலைச்செல்வன் சேர் பயன்படுத்திய மோட்டார் சயிக்கிளில் இருந்து அவர் கொண்டு வந்த கைப்பையின் கலர் அத்துடன் அதை அவர் கையில் பிடிக்கும் முறை பற்றி ஞாபங்களை மீட்டோம்.

என் நண்பன் கிரியுடன் சேர்ந்து.

அவரும் உடனே அந்த காலத்திற்கு சென்று அந்த ஞாபக நீட்சிகளை இன்னும் விரிவுபடுத்தினார்.


அதன்போது கிரி தனக்கு எப்படி எதற்கு சற்குணராசா சேர் தடியால் அடித்தார் தான் அதற்கு எப்படி கத்தினேன் என்று விபரமாக விளக்கினான்.


அன்று ஆசிரியர்களை நாங்கள் றோட்டில் கண்டால் மரியாதைக்காக ஓடி ஒளித்தோம்.

சாரம் கட்டிக்கொண்டு றோட்டில் நின்றால் யாராவது எங்கள் ஆசிரியர் வந்தால் தலை தெறிக்க ஓடி மறைந்தோம். அதற்காக அப்போது மதில் ஏறி குதித்து ஓடியது உண்டு.

இப்போதும் எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு அது ஒரு ஆசிரியர் நான் அவரை கவனிக்காமல் மதிலில் ஏறி இருந்த நேரம் அவரின் சயிக்கிளை பொறுமையாக எதிரே இருந்த மதிலில் சாத்திவிட்டு வந்து


‘ டேய் நீ போன முறை என்னை கண்டு ஓடினது எனக்கு தெரியும் நீ மதில் ஏறி குதிக்கிற நேரம் கீழே கிணறு இருந்தால் என்ன செய்வாய் குரங்கு போல பாயதே’ என்று அன்பாக வெருட்டியதும் உண்டு.

இன்று வரை எனக்கு சந்தேகம் அவர் என்னிடம் எவ்வாறு எனக்கு தெரியாமல் வந்தார் என்று.

அந்த பண்பட்ட ஆசிரியர் இப்போது எங்களோடு இல்லை அவர் யாருமல்ல எங்களுக்கு சமுகக்கல்வி படிப்பித்த பாலசுப்பிரமணியம் சேர்.


இன்றைய நாட்டு நடப்பு மற்றும் சரி பிழைகளை கடந்து இன்று அந்த ஆசிரிய மாணவ உறவுப்பாலம் தன் சுயாதீனத்தை இழந்து நிற்கின்றது என்பது என் தனிப்பட்ட கருத்து


உங்கள் கருந்துகளை பதிவிடுங்கள்.

எழுத்து – வி.நிஷாந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *