எனக்கு ஒரு Doubt அது….

எங்கட ஊரில ஒரு வீட்டில ஒரு கறுத்த கொழுத்த பூனை வெள்ளையும் கறுப்பும் கலந்து ஒரு சாம்பல் நிறத்தில் இரண்டு குட்டிகளும் ஒரு தனி கறுத்த குட்டியும் போட்டிருந்தது சாமி அறையில் இருக்கும் தேக்கு மர கட்டிலுக்கு பின்னுக்கு

குட்டிகள் பிறந்து பதினைந்து நாட்கள் ஆகுது.

அந்த பூனைக்கு இரண்டு நாளாக கொஞ்ச சாப்பாடும் கிடைக்கவில்லை,

அதை வளர்த்தவர் கொழும்புக்கு போட்டார். தொலைந்த அடையாள அட்டையை புதுப்பித்துகொள்ள.

அவர் போய் ஒரு வாரம் ஆகுது. வீட்டில் சமையல் இல்லை. மீதி சாப்பாடுகளும் குப்பை கூடையில் இல்லை. எல்லாமே காலி

அதே வீட்டில் சமையல் அறைக்கு மேல் இருக்கும் Level Sheet இல் வீட்டு எலி ஒன்று பழைய கிழிந்த செய்தித்தாள்களை பொறுக்கி எடுத்து வந்து அடுக்கி அதன் நடுவில் நாலு குட்டிகள் போட்டிருந்தது.

குட்டிகள் பிறந்து ஆறு நாட்களே. ஆகியிருந்தன

பூனைக்கோ அகோர பசி, அங்கும் இங்கும் ஓடி திரிந்தது. அலைந்து பார்த்து அலுத்தது

ஒரு சாப்பாடும் கிடைக்கவில்லை. பசி தன் வேலையை வேற சரியாக காட்டியது.

தன் பிள்ளைகளை விட்டுட்டு தூர போய் உணவு தேடமுடியாமல் பரிதவித்தது.

பிள்ளைகள் பாலுக்காக அழத்தொடங்கின. அழும் சத்தத்தை கேட்க பொறுக்கமுடியாமல்

நடந்து வந்து

பூட்டி இருக்கும் சமையல் அறை கதவிற்கு வலப்புறமாக இருக்கும் பிரதான கதவிற்கு பின் குந்தியிருந்தது.

அதே போல் அதே அகோர பசியில் எலி ஒன்றும் பக்கத்து வீட்டில் ஒரு சுவர் தாண்டி பசியால் துடித்தது.

அந்த எல்லை சுவர் தாண்டி

சமையலறையில் இறங்கி வந்து பார்த்தது, சாப்பிட ஏதும் இல்லை.

கழிவுபொருட்கள் போடும் வாளியில் ஏறி எட்டி பார்த்தது, அங்கும் ஒன்றும் இல்லை.

திருடி தின்பதற்கும் வழி இல்லை எல்லா அலுமாரிகளும் பூட்டு.

மோப்பம் பிடித்து பார்த்தது அதன் மோப்ப எல்லை வரை எந்த வித சாப்பாடு வாசம் இல்லை.

சரி சமையல் அறை வாசலை ஒட்டியிருந்த யன்னலால் வெளியில் வந்து தலையை திருப்பி பார்த்தது, யாருமே இல்லை யன்னலை விட்டு இறங்கி தரைக்கு தாவியது.

பசியில் குந்தியிருந்த பூனை எலியை கண்டது

குந்தியிருந்த பூனை அதிரடியாக உசாராகி எலியை நோக்கி தாவியது.

பூனை தாவிய வேகத்தினால் அங்கிருந்த பழைய பேப்பர் துண்டு பறந்து சரசரத்தது.

எலி சுதாகரித்துக்கோண்டு வேகமாக தாவிய பூனைக்கு மறுதிசையில் பாய்ந்து சுவருக்கு ஓரமாக சென்று வேகமாக ஓட ஆரம்பித்தது.

பூனை தொடர்ந்து திருத்த, வாசற்படியால் இறங்கி வலது பக்கம் திரும்பி உயிரை கையில் பிடித்துக்கோண்டு ஓடும் வேகத்தை புயலாய் மாற்றியது.

துரத்தி வந்த பூனை சற்று வேகத்தை குறைத்து எலி வலது பக்கம் திரும்பியதும் தானும் வலது பக்கம் திரும்பி பாய்ந்து பாய்ந்து துரத்த தொடங்கியது.

எலி பக்கம் மாறி மாறி தாவி ஓடியது பூனையின் பாய்ச்சலில் இருந்து தப்பிக்க

எலி தன் பிள்ளைகளை மனதில் வைத்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு தலை தெறிக்க ஓடியபடி

கடவுளை கும்பிட்டது.

‘பிள்ளையாரே,

என்ர உயிரை காப்பாத்திடு பசியோட இருக்கிறன் நான் திரும்பிப்போகவேணும்; என்ர பிள்ளைகளும் என்னை எதிர்பார்த்து பசியோடு பாலுக்காக காத்திருக்குதுகள்
கடவுளே என்னை காப்பாத்திடு…’

பசி கண்ணை மறைக்க வேறு வழி தெரியாமல் அசுர வேகத்துடன் எலியை தூரத்திக்கொண்டு பூனையும் கடவுளை கும்பிட்டது.

‘பிள்ளையாரே, என்னை காப்பாத்திடப்பா,

எனக்கு மரண பசி, பிள்ளைகளுக்கும் பசி என்னால் ஓட கூட முடியவில்லை இந்த எலியை பிடித்துத் தின்று என் பசி போக்கி என் பிள்ளைகளின் பசியையும் போக்க வேண்டும.; எனக்கு உதவி செய்யப்பா…’

என்று மனதில் இரந்து பரிதாபமாக வேண்டியது பூனை, எலியை சளைக்காமல் துரத்தியபடி.

பூனையின் பாயந்து தாவும் வேகத்திற்கு ஈடுகொடுக்க விவேகமாக வளைந்து வளைந்து பக்கம் மாறி ஓடி திரும்பி வீட்டின் வெளிப்புறம் வந்து,

வீட்டின் எல்லை சுவருக்கும் மதில் சுவருக்கும் இருக்கும் இடைவெளியில் நேராக ஓட தொடங்கியது.

இப்ப

எலியை பிடிக்க பூனைக்கு 50 % சந்தர்ப்பம்.

எலிக்கு பூனையில் இருந்து தப்ப 50 % சந்தர்ப்பம்.

எலி தன் பிள்ளைகளை நினைத்தபடி உயிரை கையில் பிடித்தபடி தலைதெறிக்க ஓடுகிறது.

பூனை பசியால் வாடி வதங்கி வயிற்று பசி நீங்கி பிள்ளைகளுக்கு போய் பால் கொடுத்து பிள்ளைகளை காப்பாற்ற எலியை திருத்துகிறது

அப்ப

நம்ம பிள்ளையார் என்ன செய்வார்?

எலிக்கு Support பண்ணுவாரா?
அல்லது பூனைக்கு பரிதாபம் பார்ப்பாரா?

இது தான் என் Doubt ?

யாருக்கும் பதில் தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கோவன்?

எழுத்து
வி.நிஷாந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *